யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் ராமேஷ்வரத்திற்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவன் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை நபர் ஒருவர் ராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று அதிகாலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர்.
இதன்போது, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இருந்த பூங்காவில் சந்தேகத்துக்கிடமாக அமர்ந்திருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் இலங்கை பணம், இலங்கை பாஸ்போர்ட், இலங்கை அரசு அடையாள அட்டை இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 34 வயதுடைய கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் கடந்த 6ஆம் திகதி இரவு இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் பைபர் படகு மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வந்து இறங்கியுள்ளார்.
பின்னர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள அவரின் மனைவியை பார்ப்பதற்காக வேதாரணியத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் வந்து இறங்கி மண்டபம் அகதிகள் முகாமிற்கு செல்வதற்காக பூங்காவில் காத்திருந்த போதே கியூ பிரிவு பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட கண்ணனை போலீசார் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட கண்ணன் மீது கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியா நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவரை புழல் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.











