தங்களுக்குள்ளேயே சுடுபட்ட சிறிலங்கா எம்.பிக்கள் : அரசாங்கத்தை எச்சரிக்கும் சிறீதரன்

2 days ago

பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கியினால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட வரலாறுகள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது. உறுப்பினர்கள் கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நேற்று (02) நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் அச்சமான சூழ்நிலை

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் ஒரு அச்ச சூழ்நிலை உள்ளதாக ஜனாதிபதியே குறிப்பிடுகின்றார். நீதிமன்றம் வருபவர்களே சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். பிரதேச சபை தவிசாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார். போக்குவரத்து பாதையில் கூட எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் உண்டு.

 அரசாங்கத்தை எச்சரிக்கும் சிறீதரன் | Srilankan Mps Have History Of Shooting Each Other

அரசாங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம். போதைப்பொருள் பாவனை என்பது தென்னிலங்கைக்கு மாத்திரம் அல்ல வடமாகாணத்திலும் உள்ளது. இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்பு அல்லது துப்பாக்கிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதல் தெரிவு செய்யப்பட்டபோது எனக்கு துப்பாக்கி வழங்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு

அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்பு மீள ஒப்படைத்துள்ளேன். துப்பாக்கி வழங்கப்பட்டால் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். எவ்வளவு பாதுகாப்பு என்பதும் ஆராயப்படவேண்டும்.

 அரசாங்கத்தை எச்சரிக்கும் சிறீதரன் | Srilankan Mps Have History Of Shooting Each Other

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே சுடுபட்ட வரலாறுகளும் உண்டு. துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது. உறுப்பினர்கள் கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுவரை நான் ஆயுதம் கோரவில்லை. எனக்கு அரசாங்கம் தந்தால் பயிற்சி தேவையில்லை“ என தெரிவித்தார்.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!