இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்பர் வீதி பகுதியில் 18 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சந்தேக நபர் சுமார் 6 தடவைக்கு மேல் இக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இம்முறை குறித்த சந்தேக நபரை கல்முனை நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் சந்தேக நபருக்கு எதிரான சகல ஆதாரங்களையும் அடுத்துவரும் தவணையில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அடுத்து பெரிய நீலாவணை பொலிஸ் பகுதியில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான 32 வயதான மற்றுமொரு சந்தேக நபரை சிறைச்சாலை அத்தியட்சகரின் ஊடாக புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இவ்விரு சந்தேக நபர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை காரணமாக உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









