உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (03) வழங்கப்படவுள்ளன.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நியமன நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர், உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத் துறைக்காக ஒரே நேரத்தில் அதிகளவான வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்படும் சந்தர்ப்பம் இதுவாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஆயுர்வேத சேவையினை மேம்படுத்துவதற்கும், தரமான நோயாளர் பராமரிப்புச் சேவையை வழங்குவதற்கும், இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையில் உள்ள ஆரம்ப நிலை வைத்திய அதிகாரிப் பதவி வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டும், இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆயுர்வேத திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டம் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய வைத்திய அதிகாரிகள், அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் சில உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.










